Tamilcube.com TamilCube MOBILE
ONLY FOR THE BEST
ஐந்து பொற்காசுகள் ஒருநாள் முல்லா அயல் ஊர் ஒன்றுக்குச் சென்றிருந்தார்.

அந்த ஊரில் பொதுமக்கள் குளிப்பதற்காக ஒரு பொது குளியல் அறை இருந்தது.

முல்லா அங்கே குளிப்பதற்காகச் சென்றார்.

அப்போது முல்லா மிகவும் அழுக்கான உடையை அணிந்திருந்தார். அதனால் அங்கிருந்த வேலைக்காரர்கள் முல்லாவை சரியாகக் கவனிக்க வில்லை. அலட்சியமாக அவரை நடத்தினர். சீக்கிரம் குளித்து விட்டுச் செல்லுமாறு அவரை அவசரப் படுத்தினர்.

குளித்து முடித்து விட்டு வெளியே வந்த முல்லா வேலைக்காரர் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு ஒரு தங்கக் காசை அன்பளிப்பாகக் கொடுத்தார்.

அதைக் கண்டு வேலைக்காரர்கள் பிரமித்துப் போய்விட்டனர். இவர் பெரிய செல்வந்தர் என்பதை முன்னதாகத் தெரிந்த கொள்ளமால் போய் விட்டோமே. இவரை நன்கு கவனித்து உபசாரம் செய்திருந்தால். இன்னும் நிறைய தங்கக் காசுகள் கொடுத்திருப்பாரே என்று நினைத்தனர்.

இரண்டு நாட்கள் கழித்து முல்லா மறுபடியும் அந்தக் குளியல் அறைக்குக் குளிக்கச் சென்றார்.

வேலைக்காரர்கள் முல்லாவை அடையாளம் கண்ட கொண்டனர்.

உடனே அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு முல்லாவுக்கு ராஜ உபசாரம் செய்தனர்.

உடலில் தேய்த்துக் கொள்ள நறுமணப் பொடிகள் தந்தனர். வாசனைப் பன்னீர் கொடுத்தனர்.

அவர்கள் முல்லாவை சூழ்ந்து கொண்டு அவர் உடம்பை அழுக்குப் போகத் தேய்த்து நிராடச் செய்தனர்.

உயர்தரமான துவாலையை உடல் துவட்டக் கொடுத்தனர்.

பிறகு அவர் உடலில் வாசனை திரவியங்களைப் பூசினர்.

அன்று முல்லா தங்களுக்கு ஆளுக்கு ஐந்தைந்து பொற்காசுகளாவது அன்பளிப்பாக் கொடுப்பார் என்று எதிர்பார்த்தனர்.

முல்லா ஆளுக்கு ஒரு செப்புக் காசுதான் கொடுத்தார்.

வேலைக்காரர்கள் மிகவும் ஏமாற்றமடைந்து இவ்வளவு சிரமப்பட்டு உங்களுக்கு உபசாரம் செய்ததற்கு இந்தச் செப்புக்காசுதானா பரிசு ? என்று கேட்டனர்.

முல்லா உடனே அன்றைய தினம் நான் உங்களுக்கு அளித்த பொற்காசு இன்று நீங்கள் செய்த உபசாரத்திற்கான பரிசு. இன்று கொடுப்பதோ அன்று நீங்கள் என்னை அலட்சியப்படுத்தியமைக்காகக் கொடுத்த பரிசு என்று கூறியவாறே குளியலறையை விட்டு வெளியே நடந்தார்.



Get it on Google Play